Pages

Wednesday, April 18, 2012

கண்ணீர் தடங்கள் - ஒரு முஸ்லிம் மௌலவியாவின் வாக்குமூலம்!

அல்லாஹ் அருளிய மாபெரும் அருள்களில் ஒன்றுதான் திருமண உறவு. அது பலரது வாழ்வில் பூத்து குளுங்கி மணம் வீசுகிறது. அல்ஹம்துலில்லாஹ். ஆனால், சிலரது திருமண வாழ்க்கை என்பது கண்ணீரில் கரைந்து கேள்விக்குறியாக மாறுகிறது. இது ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.

இலட்சங்கணக்கில் இலட்சியங்களை அடைகாத்து, ஒரு மௌலவியா எனும் அந்தஸ்தில் மார்க்ப் பணியில் என்னை அர்ப்பணித்து வாழ்ந்த காலம் அது. ஒரு மௌலவி என்னை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் திருமணத்தில் மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருந்த பொதும் அவர் கூறிய நியாயமான காரணங்களோடு, அவர் ஓர் உண்மையான, இறையச்சமுள்ள, நேர்மையான மௌலவியாக இருப்பார் எனும் பூரண நம்பிக்கையில் சம்மதித்தேன்.

திருமணம் முடிந்ததும் தலைநகரில் வீடொன்று எடுத்துள்ளதாகவுக் கூறி என்னை அழைத்து வந்தார். எனது வீட்டார் எவ்வளவோ தடுத்தும் அவர் மீதுள்ள நம்பிக்கையில் நானும் வந்தேன். அவர் சொன்னதெல்லாம் பொய்யென்று வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததுமே புரிந்து கொண்டேன்.

பாழடைந்த ஒரு வீடு. தண்ணீரில் மூழ்கி, நத்தைகளும், பூச்சிகளும் நிறைந்திருந்தன. தண்ணீர், மின்சாரம், பாத்ரூம் என எதுவுமில்லை. அங்கே என்னை குடிவைத்தபோது அழுவதை தவிர வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவரது அன்பைப் பெதரினெ எண்ணினேன்.

நகைகளை ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தார். தனியாக என்னை விட்டு விட்டு வெளியில் செல்ல ஆரம்பித்தார். தனிமையில் உறங்குவதும் இரவுகளில் பயந்து பயந்து அழுவதும் வழக்கமாகி விட்டது.

11 மாதங்களின் பின் ஒரு குழந்தைக்கு தாயாகும் நிலை ஆரம்பித்தது. கடும் மசக்கை. எனக்கு எவ்வித முன் அனுபவமும் இல்லை. வீட்டாரும் இல்லை. கணவரது ஆதரவும் கிடைக்கவில்லை. பசியோடும் வேதனையோடும் தனிமையில் செத்து செத்து பிழைத்தேன். அவர் ஊணமுற்றாலும் அவரை என் தோல் மேல் சுமக்க நான் தாயராக இருந்தேன். ஆயினும் அவர் ஒரு நாள் கூட அன்போடு என் தலையை வருடி ஆறுதல்படுத்தியதில்லை. கணவர் கண்ணெதிரில் இருந்தும் ஆதரவு கிடைக்கவில்லையெனில் அது பெரும் சித்திரவதை. 08 மாதங்களாகியும் ஒரு டாக்டரிடமாவது என்னை பரிசோதனைக்கு கூட்டிச் சென்றதில்லை.

அன்பையும், இரக்கத்தையும் வலியுறுத்துகின்ற நம் மார்க்கத்தின் அரணாக விளங்குகின்ற ஓர் ஆலிமின் மனோநிலை இப்படி ஈவிரக்கமற்றதாக இருக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு இது எத்தனையாவது குழந்தையாக இருந்தாலும் எனக்கு முதல் குழந்தையல்லவா?. எத்தனை எதிர்பார்ப்புக்களோடும் ஆசையோடும் ஒரு பெண் சுமையாக சுமந்திருப்பாள்?. எனது இளம் வாழ்வை அவருக்காக தியாகம் செய்து மனைவி ஆனேன். ஆனால் எனது உணர்வுகளை ஒரு துளியும் அவர் மதிக்கவில்லை.

அவரது நடத்தைகளும் நாளுக்கு நாள் மாறின. அவரது உண்மையான தோற்றம் வெளிப்பட ஆரம்பித்தது. பல பெண்களுடனான தொடர்பும் அவர்களுடன் சுற்றுவதும் தெரிய வந்தது. “தான் திருமணம் முடிக்காதவர், தனக்கென யாருமில்லை, தான் ஓர் அநாதை”  என்று பெரும் பொய்களை கூறி வேறு இடங்களில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. அவர் பற்றிய உண்மைகள் தெரிய வந்து அடியும் உதையும் வாங்கி வந்த வரலாறுகளும் உண்டு.

எனது நகைகள் அனைத்தையும் விற்று முடித்தார். பல ஆண்களோடு என்னை இணைத்து இட்டுகட்டி அருவருப்பாக பேசுவார். மேடைகள் ஏறி மார்க்கம் பற்றி போதிக்கும் அவரிடம் எந்த மார்க்க பண்புகளும் இல்லை. வாய் நிறைந்த பொய்யும், வாழ்க்கை நிறைந்த பாவங்களுமே அவரிடம் நிறைந்திருந்தது.

எத்தனையோ பேரின் வாழ்க்கையில் ஆறுதலாக இருந்த நான், சரி பிழை சொல்லி கொடுத்து பலருடைய சோகங்களில் சுமை தாங்கியாக இருந்த நான் என்கே சுமையாகி ஆறுதலுக்கு யாருமின்றி, அனலிடை புளுவாக துடித்தேன். என் குடும்பத்தாருடன் போய் சேர்ந்து கொள்ளும்படி அக்கம் பக்கத்தவர்கள் அடிக்கடி எனக்கு புத்தி சொல்வர். பல தடவைகள் அவரிடமிருந்து பிரிந்துவிட முயற்சி செய்தேன். அவர் விடவில்லை. இப்படியே இரண்டு குழந்தைகளிற்கு தாயானேன்.

பல பொய்களை கூறி, எனக்கு தெரியாமல் மூன்றாம் பெண்ணையும் திருமணம் செய்தார். இரண்டு நாட்களில் அந்த பெண்ணை விட்டு விட்டு வந்து விட்டார். அந்த பெண்ணின் நெஞ்சில் கட்டி இருப்பதை தனது செல்போனில் போட்டோ பிடித்து, தனது நண்பர்களுக்கெல்லாம் அதைக்காட்டி மிக கீழ்த்தரமாக விமர்சித்தார். அவளை தான் கைவிட்டதற்கு அதனை காரணம் காட்டினார். பெண்களை இவ்வாறு சீரழிக்கும் மனிதருடன் இனியும் வாழ விருப்பமில்லாமல் பிரிந்து விட்டேன்.

அன்று முதல் அவர் எனக்கு பலவிதமான துன்பங்களை ஏற்படுத்த துவங்கி விட்டார். அவர் செய்யும் அனைத்துப் பாவ்ஙளுக்கும் நான் துணையாக இருக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், காமவெறி பிடித்து அலைகின்ற எனது கணவரிடம் எனது மகளை வளர்க்க நான் அஞ்சுகிறேன். அவர் எங்களது அந்தரங்க வாழ்க்கையை வீடியோ பண்ணி வைத்திருப்பதாகவும், நான் அவரோடு வரவில்லையெனில் அவரது முகத்திற்கு பதில் வேறு ஒரு ஆணின் முகத்தை உருமாற்றி இணையத்தில் போட்டோவாக வெளியிட்டு என்னை விபச்சாரியென கேவலப்படுத்துவேனென்றும் அடிக்கடி மிரட்டினார். அவர் இப்படி அதிர்ந்து விட்டேன். அவர் மேல் எனக்கு மிகுந்த அருவருப்பே ஏற்பட்டது.

வேறு ஆணுடன் எனது போட்டோவை இணைத்து எனது நண்பியின் பெயரில் எனது குடும்த்தாருக்கு அனுப்பியுள்ளார். இதனால் பல பிரச்சனைகள் உருவாயின. அடிக்கடி எனது குடும்ப அங்கத்தவர்களின் போனுக்கு தகாத வார்த்தைகளில் எஸ்.எம்.எஸ். அனுப்புவார். நம் மார்க்கத்தில் இணைவதற்கு ஆர்வத்துடன் வந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கையையும் அவர் சீர்குலைத்துள்ளார்.

இப்படியான ஒருவருக்கு நான் மனைவியானதை எண்ணி மிகவும் வேதனை அடைகிறேன். இவர்தான் எனது குழந்தைகளிற்கு தந்தை என்று கூற நான் வெட்கப்படுகிறேன். அவரைப் போன்ற மௌலவிமார் சிலர் அவருக்கு துணையாகவும் சார்பாகவும் இருப்பதோடு் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?.

தன்னையே திருத்த முடியாத நிலையில் மேடையேறி சொற்பொழிவுகளை செய்து வரும் இவர்களால் நம் சமூகத்திற்கு என்ன நன்மை செய்திட முடியும்?. தவறுகளை சுட்டிக்காட்டினால் தவறு செய்தவர்களை விட்டு சுட்டிகாட்டுபவர் மீது சினம் கொள்வதால் குற்றங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலை நிச்சயமாக மாற வேண்டும்.

இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படும் கடிதமல்ல. இது போன்ற துர்ப்பாக்கிய நிலை வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது என்பதே எனது நோக்கம். பெற்றோர் கஷ்டப்பட்டு கனவுகளுடன் “ஆலிம்”களிற்கு மணமுடித்து வைக்கின்றனர். அதை தம் பாக்கியம் என்று கருதுகின்றனர். ஆனால் இவர் போன்ற இழிவான ஆலிம்களும் இருக்கவே செய்கின்றனர். பல பெண்கள் இப்படிப்பட்ட ஆலிம்களால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதை ஆலிம்களால் தான் தடுக்க முடியும். .

எனது கணவர் தற்போது ஐந்தாவது பெண்ணை மணந்து கொண்டு எட்டாவது குழந்தைக்கு தந்தையாகப் போகிறார். பள்ளி நிர்வாகத்தால் அங்கீகாரம் கொடுக்கப்பட்டதைப் போன்ற போலி கடிதம் மூலம் இதை அவர் சாதித்து கொள்கிறார். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை திருமணம் செய்து வைக்கு முன்னர் இவ்வாறான கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா என பள்ளி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு திருமணத்தில் பிறந்த குழந்தைகளையும் மனைவியையும் வைத்து காப்பாற்ற வழியில்லாத நிலையில், பல பெண்களை மணந்து, பல குழந்தைகளை பெற்று, உணவு, உடை, கல்வி என எதனையும் எவருக்கும் கொடுக்க முடியாமல் வறுமையில் வாட்டி சீரழிப்பது மனிதாபிமானமற்ற கொடுமையாகும். வருடந்தோறும் பிள்ளைகளை பெற்றுக்கொண்டிருக்க வேண்டிய இயந்திரமாக பெண்ணை உபயோகிப்பதும், அவளால் முடியவில்லையனில் உடனடியாக வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு அவளையும் இதே கொடுமைக்கு ஆளாக்குவதையும், வாழ்க்கைக்கு தேவையான எவ்விதமான அடிப்படை தேவைகளையும் வசதிகளையும் செய்து கொடுக்காமல் பசி பட்டினியோடு குடும்பங்களை வாட்டி வதைப்பதையும் இஸ்லாம் ஏற்க மறுக்கிறது.

இலங்கையை பொறுத்தளவில் எங்கெங்கோ நடக்கின்ற அநியாயங்கள் பற்றி பேசப்படுகிறது. ஆனால் இதே இலங்கையில் என் போன்ற எத்தனை பேர் வீட்டிற்குள் வாழ்க்கை இழந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது பற்றி சிந்திப்பதில்லை. இனிமேலாவது சிந்திக்க வேண்டும். இனிமேலும் இது போன்ற பெண்களின் வாழ்க்கை சீரழியாமல் தடுக்க வேண்டும்.

இப்படிக்கு - பாதிக்கப்பட்டவள்
(மேற்படி கட்டுரை இலங்கை ஜமா அதே இஸ்லாமியின் மாத இதழான அல்-ஹஸனாத்தில் “பெண்கள் இச்சமூகத்தின் கண்களா?, கண்ணீரா?” என்ற தலைப்பில் ஏப்ரல் மாத மலர்-38, இதழ்-04 கில் வெளியிடப்பட்டுள்ளது.)

பிற்குறிப்பு - இவ்வாறான சமூக அவலங்கள் நம் முஸ்லிம்களிற்கு மத்தியில் இனங்காட்டப்படல் வேண்டும். மார்க்கத்தை கற்ற ஒரு மௌலவியாவின் நிலையே இவ்வாறெனில், தங்களிற்கு நடக்கும் கொடுமைகளை, சித்திரவதைகளை, அவலங்களை சொல்ல முடியாத, சொல்ல தெரியாத, எழுத முடியாத, எழுத தெரியாத எத்தனையோ சகோதரிகள் காணாமல் போய் விடுகிறார்கள். இது ஒரு சமூக கடமையைாவே நாம் உணர்கிறோம்.

இவ்வாறான பிரச்சனைகள் அலசப்பட்டு ஆராயப்பட்டு அதற்கான காத்திரமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். மனித மிருகங்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படல் வேண்டும். அதற்கான முயற்சிகளிற்கான ஆதரவு சக்தியாக நாம் திகழ்வது அவசியம்.அந்த
வகையில் இந்த விடயத்தை முன்வைத்து வெளிப்படுத்திய சகோதரிக்கும், அதனை வெளியிட்ட அல்-ஹஸனாத் நிர்வாகத்தையும் உளப்பூர்வமாக பாராட்டுகிறோம். உங்கள் முயற்சிகளில் நாமும் எந்நேரமும் பங்கெடுக்க தயாராக உள்ளோம். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன். அவனே போதுமானவன். - அன்புடன் ஆசிரியர் (Real Ummah)

1 comment:

  1. இப்படிப் பட்டவர்களுக்கு தகுந்த (சித்திரவதை) சிகிச்சை செய்ய வேண்டும்..சமுதாயத்தில் மார்கத்தை போர்வையாய் கொண்டு தம் சுயரூபத்தை மொழுகும் இவர்களை எம்மிடம் தாருங்கள்.. நல்ல பாடம் கற்பிப்போம்..
    சகோதரிகளே..நீங்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்...!!அன்பு;அன்பானவர்களிடம் மட்டும் தான் கிடைக்கும்..அரக்கர்களிடம் அல்ல..போலி அன்பர்கள் பூக்களில் தேன் உறிஞ்சும் வண்டு போல..பெண்களை சுற்றி வட்டமிடும் ஆண்கள் எம் சமூகத்திலும் சமூக வலைத்தளத்திலும்(social network) பரவி இருக்கிறார்கள்..தன்னை சிந்தனை வாதி என்றும் மார்க்க வாதி என்றும் தமக்கென ஒரு கீழ்த்தரமான போர்வையை போற்றிக் கொண்டு உலா வருகின்றனர்..கவனமாக இருங்கள்..
    இந்த சகோதரியின் வாழ்க்கையை இந்த நிலைக்கு உள்ளாக்கிய மீசை வைக்க தகுதி இல்லாத ஆண்களே..அனைவரும் மீளப் போகும் இடம் அல்லாஹ்விடம்தான்;அவனை பயந்து கொள்ளுங்கள்..!!!

    ReplyDelete